நடப்பு 2019-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், இந்திய பொருளாதார வளர்ச்சி மேலும் சரியும் என டிபிஎஸ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டு காலமாக, பொருளாதார சரிவு, பொருளாதார மந்த நிலை, பல துறைகளில் விற்பனை சரிவு, உற்பத்தி சரிவு மற்றும் வேலை இழப்புகள் போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றது. இதனால் தனிநபரின் வாங்கும் திறன் என்பது பெரும் அளவில் குறைந்துள்ளது. இந்த 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக இருந்தது. இதை அடுத்து, இரண்டாம் காலாண்டிலும் 5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடையும் என்ற கணிப்புகள் வெளியாகிய நிலையில், எஸ்.பி.ஐ, நெமுரா மற்றும் கேபிடல் எகனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பொருளாதார நிபுணர்கள் இரண்டாம் காலாண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதமாக சரியும் என தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் இன்னும் சரியும் என்று டிபிஎஸ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு 2019-ஆம் ஆண்டின், மூன்றாவது காலாண்டில், இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி சுமார் 4.3 சதவீதமாக இருக்கும் எனவும், இந்தியப் பொருளாதாரம் மேலும் மோசமடையும் எனவும் டிபிஎஸ் வங்கி, தனது தினசரி பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவில் இப்போது வரை தனிநபர் நுகர்வு (Consumption) அதிகரிக்காதே இதற்கு முதல் பெரிய காரணம் என்றும், தனியார் நிறுவனங்களின் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதால், நுகர்வு மந்த நிலை தொடர்கிறது எனவும், தனிநபர் நுகர்வு மந்த நிலை வரும் காலாண்டிலும் நீடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்தியாவில் புதிய வியாபாரம் திட்டங்களை அறிவிப்பதும் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும், நுகர்வு குறைவால், உற்பத்தியும் சரிந்துள்ளதையும், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் (Durables), நான் டியூரபிள்ஸ் (Non Durables), இடைநிலை மற்றும் மூலதன பொருட்கள் போன்ற துறைகளில் அதிகமான உற்பத்தி மந்த நிலை இருப்பதையும் இவ்வங்கி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.